Wednesday, December 8, 2010

Abraham Maslow-தேவைகளின் நிலை

MASLOW --  Hierarchy  of  Needs   
             ஆபிரகாம் மஸ்லா  அமெரிக்காவை சேர்ந்த மனித உளவியல் விஞ்ஞானி .மனிதனின் தேவை நிலைகளை பற்றிய ஒரு வடிவத்தை உருவாக்கி அது  ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எப்படி தூண்டுகோலாக விளங்குகிறது என்பதை விளக்கினார்.


       நாம் அனைவரும் தேவைகளால் தூண்டப்படுகிறோம் .நமது அடிப்படையான தேவைகள் எல்லாமே பிறவியிலுருந்து உருவாக்கப்பட்டது.    
     தேவைகள் (needs ) பூர்த்தியடையும்போது ஒரு மனிதன் திருப்தியடைகிறான்.அடுத்து விருப்பங்கள் (wants ) தேவைகளாக மாறுகின்றன.தேவைகள் அதிகரிக்கின்றன..எனவே புதிய திருப்தி நிலைகளை அடைய வேண்டியுள்ளது.

   மனிதனுடைய தேவைகளை ஐந்து தொடர் நிலைகளாக பிரித்து விளக்குகிறார் மஸ்லா.ஒவ்வொரு நிலையும் பூர்த்தியாகும் போது  அடுத்த நிலையை பற்றி சிந்திக்கிறான்.அதனை அடையும் செயலில் இறங்குகிறான்.   
                
1 .உடலியல் தேவைகள்.(physiological  needs ).
         பிராண வாயு,உணவு,தண்ணீர் .இவை நமது  உயிர் வாழத் தேவையான அடிப்படை தேவைகள். 
2 .பாதுகாப்பு அல்லது வாழ்க்கை உத்தரவாத தேவை நிலை (safety  needs ).
          உடை ,வீடு ,சுகாதாரம் ,சொத்து ,பாதுகாப்பு ,உறுதி,சார்ந்திருத்தல் ,கவலை,குழப்பம் மற்றும் பயத்திலிருந்து விடுதலை .சட்டம்,ஒழுங்கு ...
       முதல்  நிலையான உயிர் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு பாதுகாப்பு தேவைகளை அடையும் செயலில் இறங்குகிறோம் .கிடைக்ககூடிய வசதிகள் தொடர்ந்து கிடைக்கும் என்ற உறுதி நிலை.
   குழந்தை பசியை ஆற்றியவுடன் ஓடி விளையாட துவங்குகிறது.விளையாடும்போது கீழே விழுந்தால் அழதுவங்குகிறது .நாம் தூக்கிவைத்துகொண்டால் அழுகை உடனே நின்றுவிடுகிறது.நம் கைகளில் அது பாதுகாப்பை உணர்கிறது.அந்த நிலைதான் இது.
3 .சமூக ஈடுபாட்டு தேவை நிலை (Love  and  belonging  needs )
    முதல் இரு நிலைகளும் பூர்த்தியானதும் தனிமையின் வேதனையை உணர்ந்து மற்றவர்களிடம் அன்பை செலுத்துவதிலும் ,அன்பை பெறுவதிலும் நாட்டம் கொள்கிறான் .மனைவி,குழந்தைகள் ,குடும்பம்,சுற்றத்தார்  ஆகியவற்றை உருவாக்குகிறான்

4 .சுய கௌரவ உணர்வு நிலை (self  esteem  needs ).
 தனக்கு உணவு ,வீடு ,குடும்பம் ,வேலை,வசதி  எல்லாம் கிடைத்த பிறகு சமுதாயத்தில் ஓர் இடம் உள்ளது என்று உணர ஆரம்பிக்கிறான்.இந்த உணர்வு மேலோங்கி நிற்கும் போது தன்னுடைய கௌரவத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் நிலைக்கு செல்கிறான்.இதுவே சுய கௌரவ நிலை.ஒருவனின் தொழிலில் தொடர்ந்து வருமானமும் வசதியும் கிடைத்தாலே தன்னை பற்றிய மரியாதையை உணர்வை பெறுகிறான்.சமூகம் அந்த மரியாதையை அவன் மீது காட்டவேண்டும் என விரும்புகிறான் .
   சக ஊழியர்களிடம் மதிப்பு,மரியாதை,தலைமைத்துவம் ,பெருமை ....இவை எல்லாம் இந்த நிலைதான்.
 இந்த நிலை பூர்த்தியானால்தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.இல்லையேல் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகிறான் .
 5 .சுய தேடல் நிலை (self  actualisation  needs ) 
       இது அதி உற்சாக நிலை அல்லது உன்னத நிலை என்று சொல்லலாம்.தான் வாழ்க்கையில் செய்ய விரும்பியதை செய்து காட்டுவேன் என்ற உறுதி நிலை.தனது திறமைகள் முழுவதையும் செயலில் காட்டி தனது இலக்குகளையோஅல்லது சாதனைகளையோ அடையும் நிலை. இந்த பிறவியில் சாதிப்பது (born  to do ) அல்லது பிறவிகடனை அடைவதே இந்த நிலை.
        நமது உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைத்த  பிறகே பாதுகாப்பு நிலைக்கு வருவோம்.நாம் பட்டினியாக உள்ள போது நமக்கு மற்றவர்களிடத்து அன்போ ,காதலோ வராது.தலைவனுக்கு உயிரையே கொடுப்பேன் என்ற தொண்டனை  இரண்டு நாள் பட்டினி போட்டால் முதல் நிலைக்கு வந்து விடுவான்.  இந்த பிரமிட் வடிவத்தில் கீழுள்ள நிலை அகன்று உள்ளதை கவனியுங்கள்.அடுத்த நிலைகளின் முக்கியத்துவம் குறைந்துகொண்டே வரும்.ஒவ்வொரு நிலையும் பூர்த்தி ஆக ஆக அடுத்த நிலைக்கு செல்கிறோம் .சிலநேரங்களில் ஒரு நிலைக்கு அச்சுறுத்தல் வந்தால் கீழ் உள்ள நிலைக்கு தள்ளபடுகிறோம் .
   பூர்த்தி செய்யப்பட்ட நிலை ஒரு மனிதனை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.எந்த நிலை பூர்த்தி செய்யபடாததோ அல்லது அந்த நிலைக்கு அச்சுறுத்தல் உள்ளதோ அது மட்டுமே ஊக்கப்படுத்த உதவுகிறது.  

 மஸ்லா  உருவாக்கிய இந்த தேவைகளின் நிலை கோட்பாடு வாழ்க்கை மற்றும் வேலை சூழ்நிலைகளுக்கும்  பொருந்தும்.மனிதனின் தேவைகள் அளவற்றது.இயற்கையாக மீண்டும் மீண்டும் எழக்கூடியது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடைவதில்லை.
       உதாரணத்திற்கு ஒரு தொழிலாளிகள் நிறைந்த நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் ,இந்த கோட்பாடு எப்படி பொருந்துகின்றது என்று பார்ப்போம்.
          முதல் நிலை --------------      உணவுக்கு தேவையான கூலி ,காற்றோட்டமான         ஒய்வு           கூடம்   ,                                          வெளிச்சமுள்ள வேலை செய்யுமிடம்.
     இரண்டாம் நிலை( safety )--காப்பீடு.,சேம நல நிதி,ஓய்வூதிய திட்டம்,தொழிலாளர் சங்கம்                                  
   மூன்றாம் நிலை (belonging )--தொழிலாளிகளுக்கு    வருடாந்திர கூட்டம்(convention )   ,  தொழிலாளர்கள் குடும்ப விழா.                                               
  நான்காம் நிலை (self  esteem )---தொழிலாளர்களின் திறமைக்கு சவாலான வேலை வாய்ப்புகளை வழங்குவது,உருவாக்குவது

 இறுதி நிலை (self  actualisation )--சிறந்த தொழிலாளிகள் அல்லது தலைவர்களிடம் முடிவெடுக்கும்   உரிமை வழங்குவது ,புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு வழங்குவது .
இது தனிமனிதனிடம் இருந்து தான் உருவாகும்.நிறுவனம் வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கமுடியும்.
    இந்த பதிவின் நோக்கத்திற்கு வருவோமா. ஒவ்வொருவரும் எந்த நிலையில் இருக்குறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இறுதி நிலையான  சுய தேடல் நிலைக்கு வருவதே  முக்கியம்...அவசியம்.  
   இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன்.
 சைதை துரைசாமி.

  இவர் ஒரு அரசியல் கட்சியில் பிரபலமாக இருந்தது அனைவரும் அறிந்த விஷயம்தான். 1984 ல்  சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று 3 வருடங்கள் பணியாற்றினார் .கட்சியின் ஏராளமான  தொண்டர்களை (belonging ) ஈர்த்தார்.ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் 352 கேள்விகள் கேட்டு அனைத்து நாட்களும் சட்டமன்றத்துக்கு வந்த ஒரே நபர் என்ற சாதனையை (esteem )படைத்து ஆக்கபூர்வமான அரசியல்வாதி என்ற பெயர் பெற்றார். அதிகார வெறியும் ,பணத்தாசையும் பிடித்த அரசியலில் போலி ஜனநாயகத்தில் தான் மட்டும் ஒற்றை ஆளாக ஒன்றும் செய்ய முடியாது ; அரசியலில் நேர்மையாக இருக்கும் மிகச்சிலருடன் சேர்ந்து போராடுவதும் சாத்தியமாவதில் சில பிரச்சனைகள் எழலாம். ஆனால் நேர்மையான அரசு அதிகாரிகளினால் நல்ல அரசாங்கத்தை ஓரளவு உருவாக்கமுடியும் என்று முடிவெடுத்து  தனது சம்பாத்தியத்தை  செலவழித்து முழுவதும் இலவசமாக மனித நேயம் பயிற்சி பள்ளியின் மூலம் சிறந்த IAS ,IPS  அதிகாரிகளை உருவாக்கும்  உயரிய நோக்கத்துடன்(self actualisation) செயலாற்றும் சைதை துரைசாமி சிறந்த மனிதர்.
  ரஜினிகாந்த் 
  சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் நிறைய முயற்சி எடுத்து திரை உலகில் நுழைந்தார் ரஜினிகாந்த் .     எல்லா சொத்து சுகங்களையும்(safety needs)  திரைப்பட உலகின் மூலம் சம்பாதித்து  ,ஏராளமான ரசிகர்களையும்(belonging) தனது ஸ்டைல் நடிப்பின் காரணமாக ஈர்த்து ,திரையுலகில் வசூல் சாதனை(esteem) புரிந்தார்.தற்போது வசதி வாய்ப்புகளின் உச்சத்தில் இருந்தாலும்    ஆடம்பரத்தை வெறுத்து  தனது சுய தேடலுக்காக ஒரு சாதாரண மனிதனாக தனது நண்பர்களுடன் பயணம் செய்யும்    ரஜினியும் ஐந்தாம் நிலையை அடைந்தவர்தான். 
       நீங்கள் உச்சகட்ட நிலையை அடைந்து  உங்களது   எதிர்காலத்தை பயனுள்ளதாக ஆக்க முயற்சிக்கலாமே .....